சிறந்த பெற்றோராகுதல் மற்றும் முன் பிள்ளைப்பருவ விருத்தி மீதான முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு.
சிறந்த பெற்றோராகுதல் மற்றும் முன் பிள்ளைப்பருவ விருத்தி மீதான முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூகத்தினை விழிப்புணர்வு செய்வது தொடர்பான நிகழ்வு கல்முனை பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஆர். சித்தி றகுமா மற்றும் ஏ.ஆர். கிபானா பஸ்லீனின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பளீல் தலைமையில் இன்று (20) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து, அவர்கள் தங்கள் பெற்றோர், மூத்தோர்கள் மற்றும் சுற்றுச் சூழலுடன் தொடர்பு கொண்டு தங்கள் ஐம்புலன்கள் மூலம் ஆரம்ப அனுபவங்களைப் பெறுகிறார்கள். பிள்ளைகள் அந்த அனுபவங்களை அர்த்தமுள்ள வகையில் பெற முடிந்தால் அது அவர்களின் முழு விருத்தியைக் கட்டியெழுப்புவதற்குப் பெரும் உதவியாக இருக்கும் இதற்காக, பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் அனைத்து தரப்பினரும், முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தையும், பிள்ளைகளின் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பையும் வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு செய்வது அவசியமாகும்.
இந்நிகழ்வில் பிரதான வளவாளராக சாய்ந்தமருது வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் கலந்து கொண்டு "சிறந்த பெற்றோராகுதல் மற்றும் முன் பிள்ளைப்பருவ விருத்தி" தொடர்பான கருத்துக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து கல்முனை பிரதேச செயலக அபாயகர ஒளடதங்கள் முற்தடுப்பு, சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வழிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் "போதையினால் ஏற்படும் பாதிப்பும் - மாணவர் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்பது" தொடர்பாக கருத்துக்களை வழங்கியிருந்தார்.
















